உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

திருமங்கையாழ்வார் அரங்கனுக்கு கோவில் கட்டும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்த நேரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த திவ்ய திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தனர். கூலிக்கு பலர் வேலை செய்து வந்தாலும் சிலர் நாம் செய்துகொண்டிருப்பது ஒரு திருத்தொண்டு என்கிற எண்ணத்துடனும், சிலர் அதை வெறும் கூலி வேலையாகவும், சிலர் அதை வேண்டா வெறுப்பாகவும் செய்துவந்தனர். சிலர் அதைக் கூட செய்யாமல் வேலை செய்வது போல பாசாங்கு செய்தனர். ஒரு மாபெரும் பணியில் இதெல்லாம் சகஜம் தானே… அவரவர்க்கு அவரவர் மனசாட்சி தானே நீதிபதி?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வெகு ஜோராக நடைபெற்று வந்த அந்த பணியில் ஒரு கட்டத்தில் பொருள் வசதி இன்றி தொய்வு ஏற்பட்டது.
செய்வதறியாது திகைத்தார் திருமங்கையாழ்வார். கணக்குப் பிள்ளையை அழைத்து பேசினார். “இன்றைய பணிக்கு கூலி தரக்கூட பணம் இல்லை” என்றார் அவர். அவ்வளவு தான் திருமங்கையாழ்வார் தவித்துப் போனார். “என்ன செய்வேன்? இந்த தொழிலார்களுக்கு என்ன பதில் சொல்வேன்? இவர்கள் எல்லாம் பிள்ளைகுட்டிக்காரர்களாயிற்றே… ரங்கா இப்படி ஒரு பழிக்கு என்னை ஆளாக்கிவிட்டாயே….” என்று அரங்கனிடம் உருகினார். “இன்று ஒரு நாள் சமாளித்துவிடுங்கள். பணத்திற்கு பதில் ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்பமுடியுமா பாருங்கள். நாளைக்கு ஏதாவது செய்யலாம்” என்று கூறி கணக்குப் பிள்ளையை அனுப்பிவிட்டு தனியே யோசிக்கிறார். நேரம் தான் சென்றதே தவிர ஒரு உபாயமும் தோன்றவில்லை. “நடப்பது அவன் பணி. அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டியது அவனிடத்தில் உள்ளது… நாம் எதற்கு கவலைப்படுவானேன்…” என்று மனதை தேற்றிக்கொண்டார். கோவிலுக்கு சென்று அரங்கனை வணங்கி தனது மனக்குறையை எடுத்து சொல்லி, “உன் ஆலயத் திருப்பணியை நீ தான் மேற்கொண்டு தொடர உதவவேண்டும். நீ அறியாதது எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அரங்கன், “அன்பனே கவலை வேண்டாம். நாளை கொள்ளிடக் கரைக்கு வாருங்கள். கொள்ளும் அளவிற்கு பொருள் தருகிறேன்” என்று கூறிவிட்டு மறைந்தான். மறுநாள் எழுந்ததும் அரங்கன் பள்ளி கொண்டிருக்கும் திசையை நோக்கி வணங்கியவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு கொள்ளிடக்கரைக்கு விரைந்தார். ஆனால் கொள்ளிடக்கரையில் யாரும் இல்லை. நிமிடங்கள் நாழிகையானது… நாழிகைகள் கரைந்து நாளானது. யாரும் வரவில்லை. ஒருவேளை அரங்கன் கனவில் வந்தது பிரம்மையோ… அரங்கன் வந்து எதுவும் சொல்லவில்லையோ… எப்போதும் கோவில் கட்டும் நினைவிலேயே இருப்பதால் நமக்கு தான் அப்படி ஒரு கனவு வந்ததோ… இவ்வாறாக சிந்தித்துக்கொண்டிருந்தார் ஆழ்வார். அரங்கன் வருவான் வருவான் என்று நாள் முழுக்க காத்திருந்தது தான் மிச்சம். ஒரு ஈ, காக்கா குருவி கூட வரவில்லை. சரி புறப்படலாம்… என்று அவர் தீர்மானித்த நேரம், தொலைவில் யாரோ வருவது போலிருந்தது. யாரோ ஒருவர் பார்க்க ஒரு வணிகர் போல இருந்தார். தலையில் தலைப்பாகை. கையில் ஒரு சுவாதியும் எழுத்தாணியும். இன்னொரு கையில் மரக்காலுடன் வந்துகொண்டிருந்தார். “ஐயா… நான் உங்களை பார்க்க தான் வந்துகொண்டிருக்கிறேன். இருங்கள் போய்விடாதீர்கள்…” என்று சற்று தொலைவில் வரும்போது ஆழ்வாரின் காதுகளில் விழுமாறு சொன்னான். ஆழ்வாருக்கு ஆச்சரியம். “என்னைப் பார்க்கவா?” “ஆமாம் ஐயா… உங்களுக்கு ஏதோ பொருள் தேவையாமே. மிகவும் சிரமப்படுகிறீர்கள் என்று ரங்கநாதர் என்னை இங்கே அனுப்பிவைத்தார்.” “ஓ… அப்படியா… மிக்க மகிழ்ச்சி ஐயா…” என்று கூறிவிட்டு அவரை சற்று ஆராய்வது போல பார்த்தார்… பின்னர் தொலைவில் அவர் வந்த திசையில் பார்த்தார். என்ன ஐயா…?” “பொருள் தர வந்திருப்பதாக சொல்கிறீர்கள். உங்களிடம் இந்த காலி மரக்காலை தவிர வேறு எதுவும் இல்லை. அதான் யாரவது பின்னால் வந்துகொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன்” .“ஐயா… இதோ இருக்கிறதே இந்த மரக்கால் தான் அந்தப் பணியை செய்யப்போகிறது”. “என்ன இந்த காலி மரக்காலா?’.“ஐயா இது ஏதோ நெல் அளக்கும் மரக்கால் என்று நினைத்துவிட்டீர்கள் போல. இது பொன் அளக்கும் மரக்கால் மந்திர மரக்கால் தெரியுமா??”. “என்ன பொன் அளக்கும் மந்திர மரக்காலா?” ஆழ்வார் வியப்போடு கேட்டார்.

“ஆமாம் ஐயா… அரங்கன் திருப்பெயரை பக்தியுடன் உச்ச்சரித்து இதில் மண்ணை போட்டாலும் அது பொன்னாகிவிடும்…” என்று கூறி சிரித்தான் அந்த வணிகன்.
“அப்படியானால் வாருங்கள் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்திற்கே செல்வோம்” என்று கூறி வணிகனை அழைத்துக்கொண்டு திருவரங்கம் விரைந்தார் திருமங்கையாழ்வார்.இவர்கள் சென்ற நேரம் கூலி கொடுக்கும் நேரம். தொழிலாளர்கள் அனைவரும் கூலி வாங்கிக்கொண்டு தத்தங்கள் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். கணக்குப்பிள்ளையோ கையை பிசைந்துகொண்டிருந்தார். வணிகரை பார்த்து “ஐயா.. மரக்காலில் மண்ணை போட்டு அளக்கலாமா? நேரமாகிறது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்கவேண்டும்.” “இதோ உடனே. ஆனால் நான் சொன்னது நினைவிருக்கிறது அல்லவா? இது மந்திர மரக்கால். யார் உண்மையில் உழைத்தார்களோ அவர்களுக்கு தான் இதில் பொன் கிடைக்கும். மற்றவர்களுக்கு மண் தான் கிடைக்கும். பொன் கிடைக்காது.”
ஒவ்வொருவருமாக வரிசையாக வந்து நின்றனர். வணிகர் மண்ணை அள்ளி மரக்காலில் போட என்ன அதிசயம்… அவரவர் உழைப்புக்கு தகுந்தவாறு மண் அனைத்தும் பொன்னாக மாறியது. பணி செய்யாமல் ஏய்த்துவந்தவர்களுக்கு மண் தான் கிடைத்தது. அவர்கள் திருதிருவென விழித்தனர்.“ம்…மரக்கால் பொய் சொல்லாது… போங்கள் இங்கே இருந்து” என்று அவர்களை விரட்டினார் திருமங்கையாழ்வார்.

மண் கிடைத்தவர்கள் அனைவரும் வெகுண்டெழுந்தனர். தங்களுக்குள் கூடிப் பேசி “ஆழ்வார் செய்தது சரில்லை. உழைப்பை வாங்கிவிட்டு கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிறார். அதற்கு இந்த வணிகன் வேறு உடந்தை. அந்த வணிகன் நம்மை மோசம் செய்துவிட்டான்” என்று குமுறினர்.“நீ மந்திரவாதி தானே… இரு இரு உனக்கு நாங்கள் பாடம் புகட்டுகிறோம்” என்று அவனை அடிக்கப் பாய்ந்தனர்.ஆனால் அந்த வணிகனோ அவர்கள் பிடியில் அகப்படாமல் ஓட்டமெடுத்தான். அனைவரும் வணிகரை துரத்த, திருமங்கையாழ்வார் குதிரை மீது ஏறி அவ்வணிகரை பின் தொடர்ந்தார். வணிகர் அப்படி இப்படி போக்குகாட்டிவிட்டு ஒரு இடத்தில் வந்து அமர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன்நாராயணனாக காட்சி தந்தார். அந்த இடமே ஆதனூர் என்னும் தலம். 108 திவ்யதேசத்தில் இது 11 வது திவ்யதேசம்.

தன்னை காக்கவந்து பொன் தந்து படியளந்தது சாட்சாத் அரங்கனே என்பதை அறிந்த திருமங்கையாழ்வார் கண்ணீர் மல்க அரங்கனின் துதித்தார். பாமாலைகள் பாடினார். பின்னர் ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதி திருமங்கையாழ்வாருக்கு உபதேசமும் செய்தார். வணிகனாக வந்தது சாட்சாத் அரங்கன் என்பதை அறிந்த ஏனையவரும் மனம்திருந்தினர். ஆழ்வார் அவர்களிடம் “திருக்கோவிலில் பணி செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. எனவே அதை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதே அரங்கன் இந்த விளையாட்டை நிகழ்த்தினார். இனியாவது சிரத்தையுடன் பணி செய்யுங்கள்” என்றார்.

அவர்களும் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஆழ்வார் கால்களில் விழுந்தனர். இன்றும் நீங்கள் ஆதனூர் (சுவாமிமலை அருகே) சென்றால் சுவாமி மரக்காலை தலையில் வைத்துப் சயனித்திருப்பார். இடது கையில் எழுத்தாணி, ஏடு இருக்கும். இங்கே சுவாமிக்கு என்ன பெயர் தெரியுமா? படியளக்கும் பெருமாள்!

நாதமுனிகள்- ராமானுஜர்

நாதமுனிகள் எப்போதும் ஒரு வாசகத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார்.
“குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப்போம். வீராணத்தில் மழை பெய்தால் நாடெல்லாம் விளையும்” என்பதே அந்த வாசகம்.
இவ்வாசகத்தின் பொருள் என்ன? ராமாநுஜரை வீராணம் ஏரியோடும், மற்ற குருமார்களைக் குளத்தோடும் ஒப்பிட்டு
இவ்வாசகத்தைக் கூறியுள்ளார் நாதமுனிகள்.
ராமாநுஜருக்கு முன் இருந்த குருமார்கள், சீடர்களுக்கு உபதேசம் செய்யும் முன் பலவகைகளில் சீடர்களைச் சோதித்துப் பார்த்து,
அதன்பின் தான் உபதேசம் செய்வார்கள்.

குளத்தில் பெய்யும் மழை எப்படி சில பேருக்குத் தான் பயன்படுமோ, அதுபோல் அத்தகைய குருமார்களிடம் உள்ள கருத்துக்களும்
ஒரு சில சீடர்களையே சென்றடையும்.
ஆனால் ராமாநுஜரோ, எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல் ஆசையுள்ள அனைத்து சீடர்களுக்கும் உபதேசம் செய்யும்
காரேய் கருணை நிறைந்தவர். வீராணத்தில் பெய்யும் மழைநீர் எப்படி பல்லாயிரக்கணாக்கான மக்களுக்குப் பயன்படுமோ,
அதுபோல் ராமாநுஜரிடம் உள்ள கருத்துக்கள் அனைத்துப் பாமர மக்களையும் சென்றடையும். நாதமுனிகள் யோக சக்தி நிறைந்தவராகையால், ராமாநுஜரின் அவதாரத்துக்கு முன்பே ராமாநுஜரின் பெருமையை அறிந்து இவ்வாசகத்தைக் கூறியுள்ளார்.

இவ்வாசகத்தைத் தமது சீடரான உய்யக்கொண்டாருக்கும் உபதேசித்தார் நாதமுனிகள்.
“இதன் பொருள் என்ன?” என்று கேட்டார் உய்யக்கொண்டார்.
“நீ உன் சீடர்களுக்கு இதை உபதேசம் செய். புரிய வேண்டிய நேரத்தில், புரிய வேண்டிய நபருக்கு இதன் பொருள் புரியும்!” என்று சொன்னார் நாதமுனிகள். உய்யக்கொண்டார் இதைத் தமது சீடரான மணக்கால் நம்பிக்கு உபதேசித்தார். “இதன் பொருள் என்ன?” என்று மணக்கால் நம்பி கேட்டபோது,
“எனக்குப் பொருள் தெரியாது. எனது குரு சொன்னதை அப்படியே உனக்குச் சொல்லி விட்டேன். நீயும் உன் சீடர்களுக்கு இவ்வாசகத்தைச் சொல்!” என்று கூறினார் உய்யக்கொண்டார்.

மணக்கால் நம்பி தமது சீடரான ஆளவந்தாருக்கும், ஆளவந்தார் தமது சீடரான பெரிய நம்பிக்கும் இதை உபதேசித்தார்கள்.
ஆனால் இவ்வாசகத்தின் பொருளைப் பற்றி அவர்கள் ஆராயவில்லை. பெரிய நம்பி, தமது சீடரான ராமாநுஜருக்கு, “குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப் போம். வீராணத்தில் மழை பெய்தால் நாடெல்லாம் விளையும்!” என்ற இவ்வாசகத்தை உபதேசித்தார்.
“ராமாநுஜா! இதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியாது. எனது குருமார்கள் சொன்னதை உனக்கும் சொன்னேன்!” என்றார் பெரிய நம்பி.
ராமாநுஜரோ, “குருவே அடியேனுக்கு இதன் பொருள் புரிந்து விட்டது!” என்றார்.

“என்ன பொருள்?” என்று கேட்டார் பெரியநம்பி. இவ்வாசகம் தனது பெருமையைச் சொல்வதாக அமைந்துள்ளபடியால்,
அதன் விளக்கத்தைத் தன் வாயால் சொல்ல விரும்பாத ராமாநுஜர்,
“இதைப் பற்றி விளக்கம் தருவதில் நேரம் செலவிடுவதை விட, இந்த வாசகம் கூறும் கட்டளையை உடனடியாக நிறைவேற்றப் புறப்படுகிறேன்!” என்று சொல்லிவிட்டு, காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியை நோக்கிப் புறப்பட்டார்.
வீராணம் ஏரியில் எழுபத்து நான்கு மதகுகள் வழியாகத் தண்ணீர் பிரிந்து சென்று நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுவதைக் கண்டார் ராமாநுஜர்.

அவ்வாறே தன்னிடம் உள்ள கருத்துக்களும் எழுபத்து நான்கு சீடர்கள் வழியாகச் சென்று பாமர மக்களை அடையவேண்டும்
என்பது நாதமுனிகளின் கருத்து என்று புரிந்து கொண்டார்.
தனது எழுபத்து நான்கு சீடர்களை சிம்மாசனாதிபதிகளாக நியமித்தார். அவர்கள் மூலம் வைணவ சம்பிரதாயம் பரவும்படி வழிவகை செய்தார் ராமாநுஜர்.
அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்ம விக்கிரகங்களை வழங்கிய ராமாநுஜர், நரசிம்ம மந்திரத்தையும் அவர்களுக்கு உபதேசித்தார்.
“நரசிம்மர் எப்போதும் அடியார்களோடு துணையாக நிற்பவர். அந்த நரசிம்மர் உங்கள் எழுபத்து நால்வரோடும் துணைநின்று
இந்தச் சம்பிரதாயத்தை வளர்த்துக் கொடுப்பார்.

உங்களிடம் ஆசையுடன் வரும் அனைத்துச் சீடர்களுக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் பாராது நீங்கள் நற்கருத்துக்களை உபதேசிக்க வேண்டும்!” என்று
சிம்மாசனாதிபதிகளிடம் கூறினார். இன்றும் ராமாநுஜரால் நியமிக்கப்பட்ட எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளும்
நரசிம்மரின் அருளால் இந்த வைணவ நெறியை வளர்த்து வருகிறார்கள். இவ்வாறு எப்போதும் தன் பக்தர்களோடு கூடவே இருந்து அவர்களுக்கு அருள்புரிவதால், நரசிம்மர் ‘ஸந்திமான்’ என்றழைக்கப்படுகிறார்.

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான இரகசியங்கள் மற்றும் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.
01) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World’s Magnetic Equator).
02) பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்., காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம் (நிலத்தை குறிக்கும்) காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees., 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE) அமைந்துள்ளது, இன்று Google Map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்., புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
03) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும்., மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிகின்றது.
04) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15 x 60 x 24 = 21,600)
05) இந்த 21,600 தகடுகளை பதிக்க 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
06) திருமூலரின் திருமந்திரத்தில்”மானுடராக்கை வடிவு சிவலிங்கம்…மானுடராக்கை வடிவு சிதம்பரம்…மானுடராக்கை வடிவு சதாசிவம்…மானுடராக்கை வடிவு திருக்கூத்தே…”என்று கூறுகிறார், அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம்… அதுவே சிதம்பரம்… அதுவே சதாசிவம்… அதுவே அவரின் நடனம்…” என்ற பொருளைக் குறிகின்றது.
07) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது. அதாவது “சி.,வா.,ய.,ந.,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
08) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும்., சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM). இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
09) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்களும்., 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்களும்., 6 சாஸ்திரங்களையும்., அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்., 18 புராணங்களையும் குறிக்கின்றது.
10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “Cosmic Dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும் 
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

பலராமன் அவதாரம்

பலராமன் அவதாரம்
பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்:கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் சொன்னான். நண்பர்களே! நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லாரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்த விளையாடினர். ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். அப்படி ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கிவிட வேண்டியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் தொப் என்று கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச் என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான். இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா
சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி துவராரகைக்கு வரும் வழியில் துர்சகுனங்கள் தோன்றின. அவைகளைப் பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன், அண்ணா! தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்?  நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன். முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீதான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு? சும்மா சொல் என்றான் பலராமன். கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான், அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான்: அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்குப் போய்விட்டான். சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த விவரங்களை துரியோதனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான்.  செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யூ-வத்ஸலா திருமணம் நடைபெற்றுவிடும். எனினும் அதை நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார். அவர்கள் தங்கள் கட்டளையை சிரம்மேல் தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமைக் குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார். வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியரைக் கண்டு, அவர்களைப் போல மாற்றருக் கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி எழுப்பினார்கள். அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் திரவியத்திற்கும் தேவ துந்துபி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார். அங்கே தன் தங்கை சுபத்திரா, மருமகன் அபிமன்யூ மற்றும் புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான் பகவான். பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார். அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர், படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் படையுடன் அவனைத் துரத்தி வந்தார்கள். பின் அவனுடன் யுத்தம் செய்தனர். சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப்படுத்தினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! என்ன காரியம் செய்தாய்? தனி ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? நமக்குள் விரோதம் வேண்டாம் என்று நான் எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் நீ பகைமை பாராட்டுகிறாய். ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான். அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! என்று சொல்லித் தான். அடுத்த நொடிப் பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் என்ற பயம் தோன்றியது. உடனே துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமன் நிலைப்படுத்தினான்.

பலராமன் தீர்த்த யாத்திரை: துவாரகையில் கிருஷ்ணனும் பலராமனும் இருந்த சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே இருந்த விரோதம் முற்றியது. இரு சாராரும் யுத்த சன்னத்தராக இருக்கிறார்கள் என்ற சேதி பலராமனுக்கு எட்டியது. இரு சாராரும் உறவினர்களே. ஆக அவர்கள் தம்மைப் போருக்கு உதவ கேட்கும் போது தாம் யாருக்கு உதவுவது என்ற தர்மசங்கடமாக சூழ்நிலையை எண்ணிப் பலராமன் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான். ஒவ்வொரு தலமும் தரிசித்து தீர்த்த யாத்திரையாக ஆங்காங்கே உள்ள பிராமணோத்தமர்களுக்கு பலராமன் தான தருமங்கள் செய்து கொண்டே வந்தான். நைமி சாரண்யத்திற்கு வந்தான். அங்கே எல்லா மகரிஷிகளும் சந்திரயாகம் செய்து கொண்டு இருந்தார்கள். அனைவரும் பலராமனைக் கண்டதும் அகமும் முகமும் மலர எழுந்து நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டதும் பலராமனுக்குக் கோபம் வந்து விட்டது. பதினெட்டுப் புராணங்களையும் மற்றவர்களுக்குத் தாம் தானே உபதேசம் செய்தோம் என்ற கர்வத்தால் இப்படி எழுந்திராது இருந்தார் என்பதைப் பலராமன் உணர்ந்தான். கையில் ஒரு தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் சென்றது. அதைப் பார்த்த மற்ற மகரிஷிகள் பலராமனைப் பெரிதும் வேண்டினார்கள். ஹே பிரபோ! சூதர் செய்த குற்றம் பெரிதே. இருந்தாலும் எங்களைக் கிருதார்த்தர்களாக்கப் பதினெட்டு புராணங்களையும் எங்களுக்கு ஓதுவித்தவர் சூதர் அல்லவா? அவரை நாங்கள் கௌரவித்து வந்தோம்.

இனியும் அவ்வாறு நாங்கள் நடந்து கொள்ள, தாங்கள் அவர் பிழை பொறுத்து அவரை உயிர் பெற்று எழச் செய்ய வேண்டும் என மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் பலராமன். அதன் பிறகு சூதர் தூங்கி எழுந்தது போல எழுந்து நின்று பலராமனை வணங்கினார். அங்கு அந்த முனிவர்களுக்கு பல்லவன் என்ற அரசன் மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். இந்தப் பல்லவன் அகஸ்தியரால் முன்பு சம்கரிக்கப்பட்ட இல்லவன் வாதாபி என்ற இரு அசுரர்களில் இல்லவனுடைய மகன் ஆவான். முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவனையும் பலராமன் அழித்தான். நாடெங்கிலும் சென்று தீர்த்த யாத்திரை முடித்து குருஷேத்திர யுத்தம் முடிவடையும் நேரம் அங்கே பலராமன் வந்தான். பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. பீமனும் துரியோதனனை கதையைக் கொண்டு பலமாகத் தாக்கினான். அப்படியே துரியோதனனும் மிகவும் ஆக்ரோஷமாகச் சண்டை செய்து கொண்டு இருந்தான். பலராமன் இரண்டு பேரையும் பார்த்து சண்டையை நிறுத்தி சமாதானமாகப் போகவும் என வலியுறுத்தினான். யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் துரியோதனன் தொடையில் பீமன் கதையால் ஒங்கி அறைந்தான். உடனே பலராமன் அலறினான். பீமா! கதை கொண்டு பகைவனை அவனது தொடையில் தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி பீமனைத் தாக்க பலராமன் கலப்பையைக் கையில் எடுத்தான். இதோ பீமா! என்னைத் தாக்கு என்று கத்தினான் பலராமன். உடனே கண்ணன், அண்ணா! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? தயவு செய்து கலப்பையைக் கீழே போடுங்கள். நீங்கள் தீர்த்த யாத்திரை போகும் முன்பு இங்கு நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க முடியாது. துரியோதனன் ஆரம்பம் முதல் இன்று வரை தர்மத்திற்கு விரோதமாகவே நடந்து கொண்டு இருக்கிறான். திரௌபதையை அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து அவள் சேலையை அவிழ்த்து அவமானப்படுத்தினான். அது எந்த தர்ம நியாயத்தோடு சேர்ந்தது? நீங்கள் மட்டும் அந்த சபையில் அன்று இருந்திருந்தால் அப்போதே அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். அன்றைய தினம் தொடையிலே கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் அவனை அதே தொடையில் அடித்து அது முறிய அவனை பீமன் மாளச் செய்வான் என்று திரௌபதை சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! என்றான் கண்ணன். பலராமனும் கோபத்தைத் துறந்து நிலைமை புரிந்து சாந்தம் ஆனான். பின்னர் துவாரகைக்குத் திரும்பி சென்றான்.

பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்
பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார். இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார். பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

வாமன அவதாரம்

வாமன அவதாரமும் , மகாபலியும் ஒரு பார்வை:-

பெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்:பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. அதில் சிங்கத்துவஜம் கட்டப்பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். அமராவதிப் பட்டணம் அழகுவாசம் செய்யும் இடம். இந்த எழிலார்ந்த நகரம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திரப்பட்டணத்தைத் தாக்கினான். பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் போய்க் கலந்து ஆலோசித்தான்.

தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்! என்றான். தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான். இப்போது நீ யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார். குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அசுரருக்குத் தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். தவிர அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன. பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.

தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட எளிய, இழிநிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். இதைக் கண்ட கச்யபர், அதிதி! உன் முகம் வாடி இருக்கிறதே! நீ ஏதோ மனவருத்தம் அடைந்ததாக நினைக்கிறேன். மேலும் உனக்குத் தெரியும், அந்தணர்களுக்கும் சாதுக்களுக்கும் எந்தவிதத் துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை என்றார். மகரிஷியே! நீங்கள் சொல்வது உண்மையே. சாதுக்களுக்கும் அந்தணர்களுக்கும்  துன்பம் நேருவது இல்லைதான். ஆனால் அதில் தாங்கள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர். தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள். இருவரும் உமக்கு சமமே! எனினும் எனக்குக் கண் கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன். தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார். அதிதியின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தார் கச்யபர். பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார். பரந்தாமனை அடையவேண்டுமானால் எத்தகைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிதி வினவினாள். பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொண்டாள். விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது.

தேவ மாதா! அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். நீ எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, கதியிழந்து நின்கின்றனர். அவர்களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன். நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன். இது தேவரகசியம். எவரிடமும் வெளியிடாதே. உன் ஆசை நிறைவேறும். அதிதியும் பகவான் திருவார்த்தைப்படி, தனக்கு திருமாலே மகனாகப் பிறக்க வேண்டும் என்று எண்ணி மகிழ்ந்தாள். வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்யபர் அதிதியிடம் புத்திரராக அவதாரம் செய்தார். இதற்குப் பெரியோர் விஜய துவாதசி என்று பெயர் இட்டனர். அப்போது தேவ துந்துபி முழங்கியது. வித்தியாதரர், சித்தர், கிம்புருடர் போன்ற வானவாசிகள் பகவானை மங்களகரமான துதிகளால் போற்றினர். பிறக்கும்போது அவர் தந்த காட்சியை கச்யபரும் அதிதியும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள். சியாமள மேனி, சிரசிலே கிரீடம், காதிலே மகர குண்டலங்கள், சங்கு சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு கரங்கள், நெஞ்சிலே ஸ்ரீவத்சம், கைவளை, தோள்வளை, இடையிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, கழுத்திலே வண்டு சூழ் வனமாலையும், கௌஸ்தூப மணியும், திருவலங்கார பூஷிதராகப் பெருமாள் காட்சி கொடுத்தார். பெற்றோர்கள் முன்பு இப்படிக் காட்சிக் கொடுத்த பெருமாள், நாடகத்தில் ஏற்படும் காட்சி மாற்றம் போலத் தன் உருவத்தைக் குட்டையான ஓர் அந்தணச் சிறுவனாக மாற்றி விட்டார்.

அதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர். தேவர்கள் குழந்தை பிறந்திருக்கும் ஆசிரமத்திற்கு வந்து வணங்கினர். பின்னர் மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் கொடுத்தார். (முஞ்சி என்றால் தர்ப்பையால் செய்த அதை ஞாண் கயிறு) பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான். அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள். இப்படி பலர் பல பரிசுகள் நல்கி மகிழ்ந்தனர். பெருமான் திருவருளையும் வேண்டினர். இவ்வாறு நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களைத் தவறாது செய்து வந்தான். நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழியனுப்பி வைத்தனர். யாகசாலைக்குள் இவர் நுழைந்ததும் இவருடைய அரும்பெரும் ஜோதியால் மற்ற இடம் எல்லாம் ஒளிமயமாகி விட்டது. இவர் என்ன கதிரவனோ, அக்கினி பகவானோ அல்லது சனக் குமாரனோ என்று அநேகரும் சந்தேகித்தனர். அவரை பலிச்சக்கரவர்த்தி அன்புருக வரவேற்றான். அர்க்கியம் கொடுத்து அவர் திருப்பாத கமலங்களைக் கழுவி அந்நீரைத் தன் தலையில் தெளித்துக் கொண்டான். பின்னர் அகமும், முகமும் மலர வாமனரிடம் பலி பேசினான்.

சுவாமி! தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்தருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பாத துளிகள் பட்டதன் காரணமாக என் முன்னோர்கள் நல்ல பதவியை பெற்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். தங்கள் பாதம் கழுவிய தீர்த்தத்தைத் தெளித்து நான் என் பாவங்களைப் போக்கிக் கொண்டேன். தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தர சித்தமாக இருக்கிறேன். தாங்கள் தம் தேவைகளைப் பெற்று மேலும் என்னை கிருதார்த்தன் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், அசுரேந்திரா! நீ கூறிய வார்த்தைகளைக் கேட்டு நான் உண்மையில் புளகாங்கிதம் அடைகிறேன். நீயோ பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். அதனால் உனக்குக் கிடைக்காத சம்பத்தே இல்லை என்று சொல்லுவேன். மேலும் நீயோ மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளைத் தட்டாமல் கேட்டு அவர்கள் வழி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவன செய்து ஆதரிக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது? அதுமட்டுமா, உன் தந்தையோ தேவதைகள் அந்தணர்களாக வந்து அவனுடைய ஆயுளை யாசிக்கிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் யாசித்ததை அவன் கொடுக்கவில்லையா? அத்தகைய குலத்தில் உதித்த நீ யாசிப்பவர்கள் எது கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கக் கூடியவன் என்பதை நான் அறிவேன். கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, பின்னால் வாக்கு மாறுவது என்பது பெருத்த அவமானம் என்பதை நீ அறியாதவன் அல்ல. நான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்றடி நிலமே. அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆக எனக்குத்தேவையான அந்த மூன்றடி நிலத்தைப் பெற்றுப் போகவே வந்திருக்கிறேன் என்றார்.

சுவாமி! என்னிடம் யாரெல்லாமோ எதை எதையோ கேட்டுப் பெற்றுச் செல்கிறார்கள். தாங்களோ மிகவும் இளைய வயதினராகத் திகழ்கிறீர். அப்படிப்பட்ட தாங்கள் தங்கள் காலடிகளால் மூன்றே மூன்று அடிகளே கேட்பதாக நினைக்கிறேன். பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்கும் உங்களுக்குப் பகவானைத் தியானிக்கச் சௌகர்யமாக நிறைய மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டத்துடன் கூடிய பெரிய நிலத்தையே தருகிறேன், என்றான் பலிச்சக்கரவர்த்தி. அசுர சிரேஷ்டனே! நீ கூறிய வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால் எனக்கு நான் கேட்கும் மூன்றடி நிலம் மட்டும் போதும், வேறெதும் தேவையில்லை என்றார். பலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான். அந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியைத் தனியே அழைத்தார். பலியே! இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது வேறு யாருமில்லை, ஸ்ரீமந்நாராயணனே. அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். எந்த காரியத்தையும் ஆராய்ந்து அவசரப்படாமல் சற்று நிதானமாகவே செய். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்கள் அனைவருக்கும் அழிவு வந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே. இப்பொழுதும் ஒன்றுமில்லை. வாக்கு கொடுத்த விட்டோமே, அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்குத் தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன. அதுமட்டுமல்ல ஒருவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும் போது நீ பொய் பேசுவது தவறில்லை. ஆகவே உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக சுக்கிராச்சாரியார் எடுத்து உரைத்தார்.

ஆச்சாரியாரே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இருந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள். என் குலம் எப்படிப்பட்டது? நான் வாக்குத் தவறினால் பரமபாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. இந்த தூர்த்தன் பிரகலாத வம்சத்தில் பிறந்தவன், வாக்குத் தவறிவிட்டான் என்று அவர் பெயரை நினைத்துத்தானே உலகம் பழிக்கும். கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சிறந்த தர்மம் வேறு உண்டோ? தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி, ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒரு போதும் நான் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே என்று சொன்னீர்கள். பகவானே வந்து யாசிக்கிறான் என்றால் அது என் குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன். அவருக்குத் தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். தங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று கருத வேண்டாம். நான் கொடுத்த வாக்குறுதியை மீறப் போவதில்லை! என்றான் பலி. அடே மூடா! நான் உனக்கு இப்படி விளக்கமாகக் கூறியும் என் பேச்சைக் கேட்காத நீ பதவி இழந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவாய் என்று சாபம் விட்டார் சுக்கிராச்சாரியார். பலி அந்த நேரத்தில் தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்துக் கொடுக்கத் தயார் ஆனான். பிறகு வாமனருடைய திருப்பாதமலர்களைக் கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினான். பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள். பலி அவருடைய பாதங்களைக் கழுவினான். அந்த நீரைத் தன் சிரசிலும், உடலிலும் தெளித்துக் கொண்டான். அவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தான். நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான். அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரியார் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டார். செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதை உணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளி வந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.

அந்தண குலத் திலகமே! உம் காலடி அளவில் மூன்று அடிநிலங்களை உமக்குத் தானம் செய்கிறேன்! என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன. இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றான். இத்துடன் ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும் வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார். தேவர்களும், முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதி பாடி வணங்கினார்கள். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார். ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை. இந்நிலையில் மூன்றாவது அடி வைக்க இடம் ஏது? என்று வினவினார். மீண்டும் தன் உடலைக் குறுக்கி வாமனராக நின்றார். அசுரேந்திரனே! நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். நீ இந்நேரம் என்னிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே! அதனால் நீ நரகத்திற்குப் போக வேண்டியதாகும் என்பதை நீ அறியாதவன் அல்லன். நான் என் காலால் ஓரடியில் பூமியை அளந்தேன். இரண்டாவது அடியால் விண்ணுலகம் முழுவதும் அளந்தும் இன்னும் என் கால் அடிக்கு இடம் தேவை என்றாகி விட்டது. மூன்றாம் அடிக்கு இடம் இல்லையே. ஆக நீ அதற்காக என்ன தரப் போகிறாய்? மகாப்பிரபோ! இந்தப் பலிச்சக்கரவர்த்தியை நீங்கள் அறியாதவர் அல்ல. எப்போதும் நான் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டேன். மூன்றாம் அடிக்குத் தங்களுக்கு இடம் வேண்டும். அவ்வளவு தானே! இதோ என் சிரசின் மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். இச்சமயம் வருண பாசத்தால் பலி கட்டுப்பட்டான். அங்கே பிரகலாதன் வந்தான். வாமனரை வணங்கினான். அவனை சாஷ்டாங்கமாக பலியால் விழுந்து வணங்க முடியவில்லை. வருணபாசத்தினால் கட்டப்பட்டதுதான் காரணம். ஆகவே தன் தலையைத் தாழ்த்தி தன் பாட்டனாகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான்.

பிரகலாதன் தன் கரங்களை உயர்த்திப் பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம், பிரபோ மகாபலிக்கு இந்திரபதவியை அளித்தவரும் தாங்களே, இப்போது அதைப் பரித்துக் கொண்டதும் தாங்களே. இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை. மகாபலியின் மனைவியும் அறிவிலிகளாக இருந்தத் தங்களைக் காத்தருள வேண்டினாள். பிரம்மாவும், தயாநிதியே! தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்குப் பரிபூரண அனுக்கிரகத்தைத் தந்தருள பிரார்த்திக்கிறேன். அப்போது பகவான் திருவாய் மலர்ந்து பிரம்மதேவனே! நான் யாருக்கு என் அருளை அளிக்க விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தைப் பறிப்பேன். அப்படிச் செய்யாவிட்டால் அவன் செருக்குற்று என்னைச் சிந்திக்காமல் போய்விடக் கூடும். எனினும் என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும், துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார் சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் பலி தன் உறுதியைக் கைவிடவில்லை. எனது மாயைகளைத் தேவர்களும், முனிவர்களும்கூடத் தாண்டுவது அரிது. ஆக அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான். அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார். பிறகு பகவான் பிரகலாதனை அழைத்து, அப்பா பாகவத சிரோன்மணியாகிய நீயும் சுதல லோகத்திற்கு போகக்கடவாய். நான் அங்கு உங்களுக்கு துவார பாலகராக இருந்து ரட்சிப்பேன் என்று அனுக்கிரகித்தார். உடனே பிரகலாதன், பிரபோ தங்களால் அசுரகுலமே பெருமையடைந்தோம். அவர்களின் சார்பாக அடியேன் தங்களை நன்றியுடன் வணங்குகிறேன் என்றான். அடுத்து சுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ஆச்சாரியாரே! யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர் வருண பாசத்தால் கட்டுண்டிருந்த பலியை விடுவித்தார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான்.

வாமன மூர்த்தியான பகவான் பலியிடம் இருந்து பெற்ற மூவுலகங்களையும் இந்திரனிடம் ஒப்புக்கொடுத்து தேவானுக்கிரகம் செய்தவராய் அந்தர்த்தானமானார். அந்த நாள் தான் ஓணம்.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!
:
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.தீர்த்தமும் பலனும்:1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
9. நீல தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
10.கவய தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
11.கவாட்ச தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
15. யமுனை தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
16. கயா தீர்த்தம்,எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பானகம் பருகும் அதிசய ஸ்ரீநரசிம்மர்

பானகம் பருகும்” அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் !
“பானகம் பருகும்” அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் !
ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகிலுள்ள குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி எனுமிடத்தில் யானை வடிவ மலையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பானக நரசிம்மர் திருத்தலம் அமைந்துள்ளது. இவரை வழிபட்டு இவருக்கு பானகம் பிரசாதமாக கொடுத்தால் சகல பிரச்சினைகளும் தவிடு பொடியாகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
மங்களகிரி மலையின் சிறப்புகள்:
panakaமங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள எட்டு மகாசேஷத்திரத்தில் இதுவும் ஓன்று. இந்த எட்டு இடத்திலும் ஸ்ரீ மஹா விஷ்ணு அமைந்திருக்கிறார். (1) ஸ்ரீரங்கம், (2) ஸ்ரீமுஷ்ணம் (3) நைமிசம் (4) புஷ்கரம் (5) சலகமாத்ரி (6) தோதாத்ரி (7) நாராயணஸ்ரமம் (8) வெங்கடாத்ரி தோதாத்ரி. ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஓன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி இகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும். இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஓரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதக்ஷேத்ரமான மங்களகிரியை வந்தடைந்தான்.
அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்ற அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால் ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
பானகமே பிரதான பிரசாதம்:
Mangalagiri-Laxmi-Narasimha-Swamy-Temple-2இந்த பானக நரசிம்மர் கோயிலில் பிரத்யோக உருவம் கொண்ட விக்ரஹம் எதுவும் கிடையாது. ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்த கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும்பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும். சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஓரு நாள் இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால் இவ்வாறு பானகம் தினமும் பருகும் நரசிம்ம சுவாமி கோயிலில் ஓரு எறும்பு கூட கிடையாது. இவ்வளவு ஏன், அந்த கோயிலில் எங்கும் எறும்பு காணப்படுவதில்லை. பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.
Korukuonda-Sri Lakshmi Narasimha Swamy Temple-2 மேலும் முன்னொரு காலத்தில் இந்த மலைப் பகுதியானது எரிமலைப் பகுதியாக இருந்ததாகவும் காலப்போக்கில் இந்த பானகத்தை பக்தர்கள் ஏற்றி வருவதால் அந்த எரிமலையின் வீரியம் குறைந்ததாகவும் வரலாறு சொல்கிறது. பானகம் பருகும் அறிய தெய்வமாக உள்ள நரசிம்மரை வாசகர்களே நாமும் சென்று வணங்கி வருவோமா?
திருவிழா :-
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் 11 நாட்கள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும். தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருக்கல்யாணம் :-
சாந்த நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். மேலும் ஸ்ரீராம நவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி,வைகுண்ட ஏகாதேசி போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக இத்திருத்தலத்தில் நடத்தப்படுகிறது.
அமைவிடம் :-
ஆந்திர பிரதேசம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து மங்களகிரி 13வது கி.மீட்டரில் உள்ளது.